சவுதியுடன் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்திலிருந்து ஏமனின் தென் பகுதி கிளர்ச்சியாளர்கள் வெளியேற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏமன் அரசுக்கும் அந்நாட்டின் தென் பகுதியில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும் இடையே சவுதி தலைமையில் அமைதிக்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.
ஏமனில் நான்கு ஆண்டுகளாகத் தொடரும் போருக்கு அரசியல் ரீதியாக முக்கியத் தீர்வாக இந்த ஒப்பந்தம் உள்ளது என்றும் சவுதி அரேபியா உங்களுடன் துணை நிற்கும் என்று சவுதி இளவரசர் முகமது சல்மான் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஏமனில் அமைதி எற்பட அந்நாட்டுடன் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட குழுவிலிருந்து கிளர்ச்சியாளர்கள் தரப்பு வெளியேறுவதாக தென் பகுதி கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், விலகலுக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகின்றனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.