ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணைந்து கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக சீன பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் சீனா இத்தகைய அறிவிப்பை இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சீன கடற்படை செய்தித் தொடர்பாளர் குவின் கூறும்போது, “இந்திய பெருங்கடல் மற்றும் கல்ஃப் ஆப் ஓமனில் வெள்ளிக்கிழமையன்று சீனா, ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட இருக்கிறோம். இந்தக் கூட்டு ராணுவ பயிற்சி மூன்று நாடுகளுக்கு இடையேயான கடற்படை ஒத்துழைப்பை இன்னும் ஆழமாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட (ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சீனா) 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக ஈரான், அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் சீனாவுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் சீனா ஈடுபட இருக்கிறது.