உலகம்

ஏமனில் துருப்புகளைக் குறைத்த சூடான்

செய்திப்பிரிவு

ஏமனில் தங்கள் நாட்டுப் படைகளின் எண்ணிக்கை 15,000-ல் இருந்து 5,000 வரை குறைந்துள்ளதாக சூடான் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சவுதி, ஏமன் போரை படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறது. இதன் காரணமாக அங்கு தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்நிலையில் ஏமனில் பிற நாட்டுப் படைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சூடான், ஏமனில் உள்ள தனது துருப்புகளின் எண்ணிக்கையை15,000-ல் இருந்து 5,000 ஆகக் குறைத்துள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஏமன் போருக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது என்று சூடான் பிரதமர் ஹம்தக் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT