அமெரிக்க மசோதா எங்கள் பொருளாதாரத்தின் மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஹாங்காங் தலைவர் கேரி லேம் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங் தலைவர் கேரி லேம் சமீபத்தில் ஹாங்காங் போராட்டம் தொடர்பாக ட்ரம்ப் அரசு கையெழுத்திட்ட மசோதாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை கேரி லேம் கூறும்போது, “இந்த மசோதா ஹாங்காங்கின் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்காவின் மசோதா தேவையற்றது. இது ஹாங்காங்கில் நிச்சயமற்ற சூழலை உருவாக்கும்” என்று தெரிவித்தார்.
ஹாங்காங்கில் நடக்கும் போராட்டம் தொடர்பாக எந்த நாடும் தலையிட வேண்டாம் என்று சீனா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது. இதனிடையே அமெரிக்கா, ஹாங்காங் விவகாரத்தில் போராட்டக்காரர்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான மசோதா ஒன்றில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த மசோதவில் ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய அந்நாட்டு போலீஸாருக்கு கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள், பெப்பர் ஸ்பிரே ஆகியவற்றை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டது.
ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்காவின் மசோதாவுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், ஹாங்காங்கில் அமெரிக்க கடற்படை பயணிப்பதற்கு சீனா தடை விதித்துள்ளதுள்ளது குறிப்பிடத்தக்கது.