இலங்கையில் தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு (டிஎன்ஏ) கோரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி (யுஎன்பி) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் பெரும் பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து 2-ம் இடம் பிடித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் (எஸ்எல்எப்பி) யுஎன்பியும் இணைந்து தேசிய அரசு அமைக்க முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், மூன்றாம் இடத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்ட மைப்பு தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இந்தக் கூட்டமைப்பு, தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி சின்னத்தில் போட்டியிட்டதால், இதன் நாடாளுமன்ற குழு தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 225 இடங்களில் யுஎன்பி 106 இடங்களிலும் எஸ்எல்எப்பி கூட்டணி 95 இடங்களிலும் டிஎன்ஏ 16 இடங்களிலும் வெற்றி பெற்றன. மீதமுள்ள இடங்களில் இதர கட்சிகள் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.