உலகம்

ஏமனில் தாக்குதல் நடத்துவதை 80% நிறுத்திவிட்ட சவுதி: ஐ.நா.

செய்திப்பிரிவு

ஏமனில் தாக்குதல் நடத்துவதை சவுதி 80% நிறுத்திவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏமனுக்கான ஐக்கிய நாடுகள் பிரதிநிதி மார்ட்டின் கிரிஃபித் கூறும்போது, ''கடந்த இரு வாரங்களாக ஏமனில் வான்வழித் தாக்குதல் நடத்துவதை ஏமன் கூட்டுப் படைகள் 80 சதவீதம் நிறுத்திவிட்டன. ஏமன் போர் ஆரம்பித்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வாரம் சுமார் 48 மணிநேரம் சவுதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்துவதை நிறுத்தி வைத்தன. ஏமனில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான நகர்வாகவே இதனைக் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவர சவுதி மற்றும் ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியது. இந்நிலையில் ஏமனில் தாக்குதல் நடத்துவதை சவுதி குறைத்துள்ளது.

ஏமன் போர்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர்.

ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT