தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளின் எல்லைப் புறத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “தாய்லாந்து- லாவோஸ் எல்லையில் இன்று (வியாழக்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியது. இதன் காரணமாக இரு நாடுகளின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டன” என்றார்.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
போப் பிரான்சிஸ் தாய்லாந்தில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நிலநடுக்கத்தால் போப் பிரான்ஸுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கம் குறித்து தாய்லாந்து அதிகாரிகள் தரப்பில், “காலை 6.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக வடக்குப் பகுதியில் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்க அதிர்வுகள் தாய்லாந்து, லாவோஸ் நாடுகளில் மட்டுமல்லாது வியட்நாம் நாட்டிலும் ஏற்பட்டன.