டெஹ்ரான்
அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதை செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாக கூறி அதிலிருந்து விலகினார்.
மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதித்து வருகிறார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது. இந்நிலையில் டெஹ்ரானுக்கு தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் கடந்த 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நேற்று மீண்டும் தொடங்கியது.
இது தொடர்பாக ஈரான் அணு சக்தி கழகம் விடுத்துள்ள அறிக்கையில், “4.5 சதவீதம் வரை யுரேனியத்தை செறிவூட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது அணுசக்தி உடன்பாட்டில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகும். ஆனால் அணு ஆயுதத்திற்கு தேவையான அளவை விட (90%) இது மிகவும் குறைவாகும்” என்று கூறியுள்ளது.