உலகம்

கர்தார்பூர் வழித்தடம்; இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் வேண்டும்: பாகிஸ்தான் ராணுவத்தின் அறிவிப்பால் குழப்பம்

செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்

கர்தார்பூர் வழித்தடம் நாளை மறுதினம் திறக்கப்படும் நிலையில் இந்தியாவில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ள நிலையில் அதனை ஏற்க அந்நாட்டு ராணுவம் மறுத்துள்ளது. இந்திய யாத்ரீகர்கள் அனைவரும் கட்டாயம் பாஸ்போர்ட் கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் திடீரென அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள பகுதி கர்தார்பூர். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவ், தமது இறுதி காலத்தை இங்கு கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது நினைவாக கர்தார்பூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டது.

இந்த குருத்வாராவுக்கு செல்வது என்பது சீக்கியர்களின் கடமைகளில் ஒன்றாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனினும், பாகிஸ்தானுக்கு விசா வாங்கி செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததால் கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரும் 9-ம் தேதி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

கர்தார்பூர் வழித்தட நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் சீக்கிய பக்தர்களுக்கு முதல் நாள் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது, பாஸ்போர்ட் தேவையில்லை, 10 நாட்களுக்கு முன்பு பதிவு செய்தால் போதும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

ஆனால் அதனை ஏற்க பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது. இந்திய யாத்ரீகர்கள் அனைவரும் கட்டாயம் பாஸ்போர்ட் கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் அசீப் கபார் நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பாதுகாப்பு காரணங்களுக்காவே பாஸ்போர்ட் தேவை என கூறியுள்ளோம். பாஸ்போர்ட் அடையாளத்தின் அடிப்படையிலேயே கர்தார்பூர் வழித்தடத்தின் வழியாக பயணம் செய்ய அனுமதிக்க முடியும். பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் இறையான்மை விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்’’ எனக் கூறினார்.

இதையடுத்து பாஸ்போர்ட் தேவையா என்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT