உலகம்

இராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த மாணவர்கள்

செய்திப்பிரிவு

இராக்கில் அரசுக்கு எதிராக இம்மாத தொடக்கம் முதல் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இராக் பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக, மூன்று வாரங்களுக்கு மேலாக போராட்டக்காரர்கள் பெரும் திரளாகக் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வன்முறை காரணமாக பிரதமர் அதில் அப்துல் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் கடந்த வாரம் இராக் தலைநகர் பாக்தாத், பஸ்ரா, மாய்சன் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகினர். 2,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இந்த நிலையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து இராக் ஊடகங்கள், “அரசுக்கு எதிராக கல்லூரி மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் பங்கேற்றனர். மாணவர்கள் பல்கலைகழக வளாகங்களில் போராட்டம் நடத்த கூடும் என்பதற்காக அவை மூடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பாக்தாத்தில் உள்ள தாஹ்ரிர் சதுக்கத்தில் கூடிய மாணவர்கள் அரசுக்கு எதிராக முழுக்கமிட்டனர். போராட்டம் நடத்திய மாணவர்கள் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 77க்கு அதிகமான மாணவர்கள் காயம் அடைந்தனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை நடந்த போராட்டத்தில் மட்டும் 74 பேர் பலியானதாகவும், அக்டோபர் மாதம் இராக்கில் நடத்தப்பட்ட கலவரங்களில் 231 பேர் பலியாகி உள்ளனர் என்று இராக் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT