லண்டனில் லாரி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் எங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று இன்னும் உறுதிப்படுத்தவில்லை சீனா தெரிவித்துள்ளது.
லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் லாரி ஒன்றில் மர்மமான முறையில் 39 பேரின் உடல்கள் கன்டெய்னரில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
பல்கேரியாவிலிருந்து வேல்ஸ் வழியாக படகில் வந்தவர்கள் இவர்கள் என்று தெரிகிறது. இந்நிலையில் இவர்கள் 39 பேரும் எப்படி கொல்லப்பட்டனர், கொல்லப்பட்டு எப்படி கன்டெய்னரில் அடைக்கப்பட்டனர் என்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த லாரியை ஓட்டி வந்த 25 வயதான வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த மோரிஸ் ராபின்சன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த 39 பேரும் சீன நாட்டவர்கள் என்று பிரிட்டன் ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டன.
39 பேரும் சீனாவை சேர்ந்தவர்களா என்று உறுதிப்படுத்த முடியவில்லை என்று சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “ நாங்கள் அனுப்பிய குழு உள்ளூர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்தனர். அவர்கள் உடல்களை சரிபார்த்தார்கள். ஆனால் அவர்களால் அந்த உடல்கள் சீனாவை சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை” என்றனர்.
2000-ம் ஆண்டில் புலம் பெயர்ந்த 58 சீனர்களின் உடல்கள் இதே போல் தென்கிழக்கு டோவர் துறைமுகம் அருகில் லாரி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.