சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்துகளுக்கு எதிராக துருக்கி நடத்தும் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் துருக்கி அதிபர் எர்டோகனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் எழுதிய கடிதத்தில், “பேச்சுவார்த்தை மூலம் குர்து படையினருடனான பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள். ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்வதற்கு நீங்களும் பொறுப்பேற்கத் தேவையில்லை. துருக்கி மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்காக நானும் பொறுப்பேற்கத் தேவையில்லை. நீங்கள் சரியான வழியில் செயல்பட்டாலும், மனிதாபிமான வழியில் நடந்தால் மட்டுமே உலகம் உங்களை சாதகமாகப் பார்க்கும். கடினமான நபராக இருக்காதீர்கள். முட்டாளாக இருக்காதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் கடந்த வாரம் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வடக்கு சிரியாவில் தனது படைகளை வாபஸ் பெற்றது அமெரிக்கா. சிரியாவில் துருக்கிப் படையினரும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குழந்தைகள்.
முன்னதாக, சிரியாவின் குர்து படைகள் மீதான தாக்குதலை துருக்கி நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.