உலகம்

பிலிப்பைன்ஸில் 200 பேர் சென்ற கப்பல் கவிழ்ந்தது: 36 பேர் பலி

ஏஎஃப்பி

பிலிப்பைன்ஸில் சுமார் 200 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 36 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் ஓர்மாக்கிலிருந்து கேமோடீஸ் தீவு நோக்கி சுமார் 200 பேருடன் சென்று கொண்டிருந்த 'தி கிம் நிர்வானா' என்ற பயணிகள் கப்பல் திடீரென கவிழ்ந்தது. கடலில் அலைகள் சுழற்றியடித்தபோது, கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் மூழ்கியது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்புனும் கடலில் அதிக அளவில் காற்று வீசியதால் மீட்புப் பணி தாமதமானது.

சுமார் 7 படகுகளில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் 36 உடல்களை மீட்டனர்.

மேலும், கப்பல் விபத்தில் சிக்கிய 21 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் காணாமல் போனவர்கள் குறித்த முழு விவரங்கள் தெரியவரவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT