உலகம்

சிக்கலில் போரிஸ் ஜான்ஸன்; நாடாளுமன்ற முடக்கம் சட்டவிரோதமானது - இங்கிலாந்து உச்ச நீதிமன்றம்

செய்திப்பிரிவு

ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் பிரெக்ஸிட் கெடு அக்டோபர் 31-ம் தேதியோடு முடிவடையும் நிலையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதி வரை முடக்கி வைத்த பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் முடிவு சட்டவிரோதமனது என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் ‘பிரெக்ஸிட்’ மசோதா தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது. ஆனால், அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்ஸன் பிரதமராகப் பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இல்லையென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.

பிரெக்ஸிட்டை நிறைவேற்றக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருந்து வரும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்ஸன் துணிச்சலாக நாடாளுமன்றத்தை முடக்கினார். செப்டம்பர் 11-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை இங்கிலாந்து நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அவர் அறிவித்தார். நாடாளுமன்ற முடக்கத்துக்கு ராணி எலிசபெத்தும் ஒப்புதழ் வழங்கினார்.

இதுகுறித்து இங்கிலாந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிரிண்டா ஹெல் கூறும்போது, “ நாடாளுமன்ற முடக்கம் சட்டவிரோதமானது. நியாயமான காரணம் இல்லாமல் இவ்வாறு முடக்குவது அரசியலைப்பு விதிமுறைப்படி நாடாளுமன்றம் செயல்படும் திறனை முடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT