மெக்ஸிகோ கிணற்றில் இறந்த உடல்களை எடுக்கும் பணி நடைபெற்ற காட்சி. 
உலகம்

மெக்சிகோ கிணற்றில் துண்டு துண்டாக உடல்கள்: போலீசார் அதிர்ச்சி

செய்திப்பிரிவு

மெக்சிகோ சிட்டி

மெக்சிகோவின் ஜாலிஸ்கோ மாநிலத்தில் ஒரு கிணற்றில் கொன்று புதைக்கப்பட்டிருந்த 44 மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பலியான அனைவரையும் யார் யார் அடையாளம் காண முடிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்; ஆனால் உடல்களை உரிய பாகங்களோடு இணைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

மெக்சிகோவின் மிகப்பெரும் போதைமருந்து கும்பல்களின் வன்முறை மையமாக விளங்குகிறது ஜாலிஸ்கோ மாநிலம். போட்டிக் குழுக்கள், பழிக்குப்பழி, கடத்தலில் துரோகம் என இங்கு அடிக்கடி பல்வேறு ஓட்டல்கள், பஃப்கள், ஒதுக்குப்புறமான பகுதிகள் என பல இடங்களிலும் துப்பாக்கிச் சூடு நடப்பதும், கொலைகள் அரங்கேறுவதும் வெகு சாதாரணம்.

செப்டம்பர் மாதத்தில் குவாடலஜாரா நகருக்கு வெளியே உள்ள கிணற்றில் மனித உடல்பாகங்கள் சில காணப்பட்டதாகவும் அங்கிருந்து வந்த துர்நாற்றம் குறித்து உள்ளூர்வாசிகள் பற்றி போலீஸில் புகார் செய்யத் தொடங்கியதாகவும் பிபிசி ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது.

குவாடலஜாரா, இந்த ஆண்டு மாநிலத்தில் அதிக அளவில் இறந்த மனித உடல்கள் கண்டறியப்பட்ட இரண்டாவது பெரிய இடமாகும்.

கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெரும்பான்மையான உடல்கள் யார் என்று அடையாளங் காணப்பட்டுள்ளன. அதேவேளை அந்த உடல்கள் அனைத்தும் கைவேறு கால்வேறு என துண்டிக்கப்பட்டிருந்ததால் அவற்றை சரியாக அடையாளம் காண வெவ்வேறு பகுதிகளை ஒன்றாக இணைக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால் அதில் போதிய அளவு வெற்றி கிடைக்கவில்லை.

காணாமல் போனவர்களைத் தேடும் ஒரு உள்ளூர் அமைப்பு, துண்டிக்கப்பட்ட பாகங்கள் சரியான உடல்பகுதிகளுடன் இணைக்கப்படுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் இதற்கான அடையாளங் காட்டலுக்கு உதவ கூடுதல் நிபுணர்களை அனுப்புமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், இப்பிரச்சினையில் உள்ளூர் தடயவியல் துறை திணறுவதாகவும், செயல்பாட்டை முடிக்க தேவையான திறன்கள் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT