ரியால்
சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான அரம்கோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ட்ரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தீவிரவாத தாக்குதலா என சவுதி அரசு விசாரணை நடத்தி வருகிறது.
சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான அரம்கோவுக்கு ஏராளமான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்ளன. சவுதி தலைநகர் ரியாத்தின் வடகிழக்கில் சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் புக்கியாக் என்ற இடத்தில் பிரமாண்ட கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் நாளொன்றுக்கு 70 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த ஆலையில் தாக்குதல் நடத்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏமனில் செயல்படும் ஹவுதி தீவிரவாதிகள் உள்ளிட்ட அமைப்புகள் திட்டமிட்டன. இதனால் ஆலையை சுற்றி கடும் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆலை மீது ட்ரோன் என்படும் வான்வழித் தாக்குதல் இன்று நடந்துள்ளது. இதனால் சுத்திகரிப்பு ஆலையும், எண்ணெய் வயலும் தீ பற்றி எரிந்தன. எனினும் இந்த தீ பின்னர் அணைக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்து சவுதி அரசு அறிவிக்கவில்லை. இது தீவிரவாத தாக்குதலா என சவுதி அரசு விசாரணை நடத்தி வருகிறது.