எல்லைப் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பும், மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ்ஸும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்க - மெக்ஸிகோ எல்லை பாதுகாப்பு தொடர்பாக மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸுடன் நான் அற்புதமான தொலைபேசி உரையாடலை நடத்தினேன். மேலும் இரு நாட்டு மக்கள் சார்ந்த முக்கியமான விஷயங்களைப் பேசினோம்” என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் செயல் திட்டத்தை அமல்படுத்த நிர்வாகத்தை அனுமதிக்க வேண்டும் என்ற டிரம்ப்பின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே சில மணி நேரங்களில் இந்தப் பேச்சுவார்த்தை நிகழ்ந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் மெக்ஸிகோ பொருட்கள் மீது ஒவ்வொரு மாதமும் 5% வரி உயர்த்தப்படும் என்று எச்சரித்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து குடியேற்றம் தொடர்பாக மெக்ஸிகோவுடன் தனது நிர்வாகம் ஒரு உடன்பாட்டை எட்டியதாக ட்ரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
மெக்ஸிகோவில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகின்றனர் என்றும் இதைத் தடுக்க சுமார் 670 மைல் தொலைவுக்கு பல்வேறு வகைகளில் தடுப்புச் சுவர் நடவடிக்கைகளில் ட்ரம்ப் இறங்கினார்.
அமெரிக்கா மெக்ஸிகோவுக்கு இடையேயான எல்லை ஓரத்தில் சுமார் 1,552 கிலோ மீட்டருக்கு சுவர் எழுப்பப்பட்டு வருகிறது.