இரவு நேர ரெய்டில் கணவரைக் கைது செய்ததையடுத்து ஆகஸ்ட் 20, 2019 அன்று, பிறந்து 40 நாட்களேயான குழந்தையுடன் ஸ்ரீநகர் காவல்நிலையத்துக்கு வெளியே காத்திருக்கும் பெண். | ஏ.பி. 
உலகம்

காஷ்மீர் விவகாரம்: தனிமனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும்- இந்தியாவுக்கு அமெரிக்க அதிகாரி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

வாஷிங்டன் டி.சி,

அரசியல் சட்டம் 370ம் பிரிவு நீக்கப்படுவது இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாக இருக்கலாம் ஆனால் காஷ்மீரில் தொடர்ந்து கைதுகளும், தனிமனித உரிமைகள் பாதிக்கப்படுவதும் அங்கு குடியிருப்போர் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவை புறத் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது ஆகவே இந்தியா இது தொடர்பாக விரைவில் செயலாற்ற வேண்டும் என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த அறிவுறுத்தல் வாஷிங்டன் டி.சி.யில் செய்தியாளர்கள் குழுவிடம் அமெரிக்க அரசுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் (பெயர் கூற விரும்பாத) தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

“இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதை அங்கீகரிக்கிறோம் ஆனால் இதன் தாக்கங்கள் இந்திய எல்லைகளைக் கடந்ததாக உள்ளன. இந்த விவகாரத்தினால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பதற்ற நிலையை பேச்சு வார்த்தை மூலம் சரி செய்ய காலங்காலமாக அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

எனவே காஷ்மீர் சூழ்நிலை குறித்து நமது அணுகுமுறை என்னவெனில் அங்கு மனித உரிமைகள் நிலவரம் குறித்த கவனம் நமக்கு இருக்கிறது. அங்கு கைது செய்தவர்களை உடனடியாக விடுவித்து, அடிப்படை சுதந்திரங்களை மீட்க இந்தியாவை ஊக்குவிப்பதாகும். பிரதமர் தன் உரையில் குறிப்பிட்டது போல் காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப அரசியல் உரையாடல் வேண்டும், ஆகவே இந்திய அரசு இந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

தொடர்ந்து காஷ்மீரில் கைதுகள் பற்றிய செய்தியும் குடிமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து வரும் செய்திகளும் தொடர்ந்து நாங்கள் கவலையாக இருக்கிறோம். தனிமனித உரிமைகளையும் பாதிக்கப்பட்டோருடன் ஒரு உள்ளடங்கிய உரையாடல் மற்றும் சட்ட நடைமுறைகளுடன் ஒத்துப்போகவும் நாங்கள் இந்தியாவை வலியுறுத்துகிறோம்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை காஷ்மீர் விவகாரம் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது. உணர்வுபூர்வமான விவகாரமாகும். எனவே பாகிஸ்தான் தனது காரணங்களுக்காகவும் தனது தேசியத்திட்டத்தின் படியும் தங்கள் மண்ணிலிருந்து தீவிரவாதம் செயல்படுவதை அனுமதிப்பதன் மூலம் யாதொரு பயனும் இல்லை என்பதையும் உணர வேண்டும்.

தீவிரவாதத்தை ஆதரிப்பது பாகிஸ்தானில் முதலீட்டைப் பாதிக்கிறது, இதனால் அதன் பொருளாதாரம் சரிவடைகிறது. எனவே பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தினால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்து அதை உடனடியாக நிறுத்த வேண்டும். 1989-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாதிகளின் போராட்டம் காஷ்மீர் மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் தோல்வியைத்தான் ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவது அதன் இறையாண்மைக்கு உட்பட்டது, ஆனால் எங்களைப் பொறுத்தவரை இந்தியாவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகள்தான் பயன் தரும் என்பதே. காஷ்மீர் விவகாரத்தை பன்னாட்டு பிரச்சினையாக்காமல் இருதரப்பு பிரச்சினையாக அணுகி நேரடி பேச்சுவார்த்தைதான் தீர்வாக இருக்க முடியும்” என்று அந்த அதிகாரி செய்தியாளர்கள் குழுவிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-ஸ்ரீராம் லஷ்மண்

தி இந்து (ஆங்கிலம்)

          
SCROLL FOR NEXT