லாகூர்:
இந்தியாவுடன் தூதரக ரீதியிலான உறவை தரமதிப்பீட்டளவில் குறைக்கவும், வர்த்தகத்தை நிறுத்தவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு ஆகஸ்ட் 7ம் தேதி முடிவெடுத்துள்ளது. அதாவது காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளது.
தேசியப் பாதுகாப்புக் குழு கூட்டம் புதனன்று (ஆக.7) பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
”டெல்லியிலிருந்து தூதரை திரும்ப அழைக்கவும், தங்கள் நாட்டிலுள்ள இந்தியத் தூதரை திருப்பி அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசின் அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தில், தேசியப் பாதுகாப்புக் கமிட்டி இந்தியாவுடன் தூதரக ரீதியிலான உறவுகளை தரமதிப்பீட்டளவில் குறைக்கவும், வர்த்தக உறவுகளை முறிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இருதரப்பு ஏற்பாடுகளை மறு சீராய்வு செய்யவும் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வுக்கு எடுத்துச் செல்லவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கமிட்டியில் பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ம் தேதியை ‘தைரிய காஷ்மீரிகளுடன் ஒற்றுமை பாராட்டும் நாள்’ என்று அனுசரிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ட்விட்டரில் பதிவிடும் போது, ஆகஸ்ட் 15ம் தேதி கறுப்பு நாளாக அனுசரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அக்கட்சியின் ட்விட்டர் பதிவில் மேலும் கூறும்போது, “கொடூரமான இனவேறி, மனித உரிமை மீறல் இந்திய அரசை அம்பலப்படுத்த அனைத்து தூதரக வழிமுறைகளையும் முடுக்கி விடவும் பாகிஸ்தான் ராணுவம் முழு கண்காணிப்பில் இருக்கவும் பிரதமர் இம்ரான் கான் அறிவுறுத்தியுள்ளார்” என்று பதிவிடப்பட்டுள்ளது.