ஆஸ்திரேலியாவில் இறக்கும் தருவாயில் இருக்கும் முதியவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்ற ஆம்புலன்ஸ் குழுவினர் செயல்படுவது பிரபலமானதை அடுத்து அரசே அதை ஏற்று செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.
ஆஸ்திரேலியில் குவின்ஸ்லாந்து மாகாணத்தில் ஆம்புலன்ஸ் அதிகாரிகள் இறக்கும் தருவாயில் இருப்பவர்களின் கடைசி ஆசையைக் கேட்டு அதனை நிறைவேற்றி தருவதை கடந்த 2017 ஆம் ஆண்டுமுதல் செய்து வருகின்றனர்.
இதில் நோயாளிகள் தாங்கள் கடைசியாக பார்க்க விரும்பும் இடங்கள், நபர்கள் என அவர்களது கடைசி விருப்பங்களை நிறைவேற்றி வருகின்றனர். இது நாடெங்கும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்வால் ஈர்க்கப்பட்ட குவின்ஸ்லாந்து அரசு இதனை அரசே ஏற்று நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது. இதற்காக தனியான ஆம்புலன்ஸ் ஒன்றையும் அம்மாகாண அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து குவின்ஸ்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்டிவன் மில்ஸ் கூறும்போது, “ வாழ்க்கையின் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும், மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் சுவாசிக்க முடியாத அவர்களின், நிறைவேற்ற முடியாத கடைசி ஆசையை நிறைவேற்றுவது மிகுந்த சவாலான பணிகளில் ஒன்று” என்றார்.
இத்தகைய சேவையுடன் செயல்படும் ஆம்புலன்ஸில், பயணிக்கும் இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு உதவ உதவியாளர்கள், மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்களும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.