தென் ஆப்பிரிக்க பூங்காவில் காரிலிருந்து சிங்கத்தை கண்டுகளித்துக் கொண்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரை சிங்கம் வெளியே இழித்து கடித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள 'லயன் பார்க்' என்ற பிரபல தனியார் சுற்றுலா பூங்காவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து பூங்கா மேலாளர் ஸ்காட் சிம்சன் கூறும்போது, "சிங்கத்தின் முகாம் இருக்கும் இடத்தில் சென்று கொண்டிருந்த கார் அருகே ஒரு சிங்கம் சென்றது. காரின் ஜன்னல் கதவு திறந்திருந்த நிலையில், அந்தப் பெண்ணை பாய்ந்து பிடித்த சிங்கம் கடித்து வெளியே இழுத்தது.
உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்தோம். ஆனால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். அத்துடன் அவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு நபரும் காயமடைந்தார்" என்றார். பலியான பெண் (22) அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஆவார்.
இந்தப் பூங்காவில் சிங்கம் தாக்கி சுற்றுலா பயணி இறந்திருப்பது முதல் முறை அல்ல. ஏற்கெனவே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி சிங்கத்தை சுற்றிப் பார்க்க வந்தபோது சிங்கம் கடித்து உயிரிழந்தார்.
இந்த பூங்காவில் சிங்கத்தை அருகில் கண்டு களிக்கும் விதமாக 'லயன் சஃபாரி' செய்ய அனுமதிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் காரில் சிங்கத்தை சுற்றிப் பார்க்கும்போது இது போன்ற விபரீதங்கள் இங்கு ஏற்படுவது வழக்கமாக உள்ளது.