உலகம்

வியட்நாமில் கலவரம்: 3 ஆயிரம் சீனர்கள் நாடு திரும்பினர்

செய்திப்பிரிவு

வியட்நாமில் கலவரம் தீவிரமடைந் துள்ளதையடுத்து, அங்கிருக்கும் 3 ஆயிரம் சீனர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

தெற்கு சீனக் கடல் பகுதியில் எண்ணெய் துரப்பண பணியை மேற்கொள்ள கடந்த 1-ம் தேதி சீனா நடவடிக்கை எடுத்தது.

அந்த கடல் பகுதியை தனக்கு சொந்தமானது என்று வியட்நாம் உரிமை கோரும் நிலையில், சீனாவின் இச்செயல் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து வியட்நாமின் 22 மாகாணங்களில் சீனர்களுக்கு எதிராக கலவரம் பரவி வருகிறது. ஹா டின் மாகாணத்தில் உள்ள உருக்கு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

இந்த கலவரத்தில் 21 பேர் உயிரிழந்ததாக வியட்நாம் அரசு அதிகாரப்பூர்வமாக அறி வித்துள்ளது. ஆனால், அதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 2 பேர் மட்டுமே உயிரிழந் துள்ளதாகவும், 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வியட்நாமில் உள்ள 3 ஆயிரம் சீனர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவரும், சீன தூதரகத்தின் உதவியுடன் விமானத்தில் அழைத்து வரப்பட்டதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு திரும்பியவர்களில் 16 பேர் காயமடைந்திருந்தனர் என ஜின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வியட்நாமிலிருந்து வெளி யேற விரும்பும் சீனர்களுக்கு தேவையான விமான வசதியை சீன அரசு ஏற்படுத்தித் தந் துள்ளது.

கலவரம் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், வியட்நாமிற்கு யாரும் செல்ல வேண்டாம் என்று தனது நாட்டினரை சீன அரசு எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT