உலகம்

தமிழக, குஜராத் மீனவர்கள் விடுதலை ராஜபக்சே, நவாஸ் ஷெரீப் உத்தரவு

செய்திப்பிரிவு

பிரதமராக பாஜக தலைவர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் டெல்லி வருகின்றனர்.

இதையொட்டி, தமது நாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய நவாஸ் ஷெரீபும் ராஜபக்சேவும் நல்லெண்ணத்தின் வெளிப் பாடாக, உத்தரவு பிறப்பித்துள்ள னர். இரு நாடுகளின் இந்த நடவடிக்கையை நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க அதிபர் மகிந்த ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக அதிபரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். எனினும், இலங்கை சிறையில் இப்போது எத்தனை தமிழர்கள் உள்ளனர் என்ற விவ ரத்தை மீன்வளத் துறை அமைச் சகம் தெரிவிக்கவில்லை.

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை ஒட்டுமொத்தமாக இலங்கை அரசு விடுவிப்பது இது இரண்டாவது முறையாகும்.

கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. அதனால் மகிழ்ச்சியடைந்த ராஜபக்சே, இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவித்தார்.

151 குஜராத் மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்

இதனிடையே, மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்க வருவதால் நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக தமது நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 151 குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்தது.

கராச்சியில் உள்ள மாலிர் சிறைச்சாலையிலிருந்து 59 மீனவர்களும் சிந்து மாகாணம் ஹைதராபாதில் உள்ள நரா சிறையிலிருந்து 92 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் எழுத்து பூர்வமாக உத்தரவு பிறப்பித்ததன் பேரில் அவர்களை விடுதலை செய்ததாக கராச்சியில் உள்ள மாலிர் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் சையது நசீர் ஹுசைன் கூறினார்.

வாகா எல்லையில் ஒப்படைப்பு

அந்த மீனவர்கள் அனைவரும் பஸ்களில் கராச்சியிலிருந்து வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், பல்வேறு சிறைகளில் அடைக்கப் பட்டிருந்த 337 இந்திய கைதிகளை பாகிஸ்தான் விடுவித்தது. தீபாவளி பண்டிகையின்போதும் நல்லெண்ணத்தின் அடையாளமாக 15 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இப்போதைய நிலையில் 229 இந்திய மீனவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவைச் சேர்ந்த 780 படகுகளும் பாகிஸ்தானின் பாதுகாவலில் உள்ளன.

இதைத் தவிர தற்போதைய மீன்பிடி பருவத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையில் இந்திய மீனவர்களின் 23 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன என மீனவ அமைப்புகள் தெரிவிக்கின்றன.

அதேபோல, 200 பாகிஸ்தான் மீனவர்களை இந்திய அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களது 150 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT