நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள மீட்புப் பணிகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
அதேபோல், போரினால் பாதிகப்பட்டுள்ள ஏமன் நாட்டிலிருந்து அண்மையில் தனது சொந்த மக்களை மட்டுமல்லாமல் வெளிநாட்டவர் பலரையும் இந்தியா திறம்பட காப்பாற்றியிருக்கிறது எனவும் அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா கூறும்போது, "கடந்த சில வாரங்கள் இந்தியா தனது தலைமைப் பண்பை உலகுக்கு நிரூபித்துள்ளது. முதலில் ஏமன் மீட்புப் பணிகள், இப்போது நேபாள மீட்புப் பணிகள். இந்தியாவுக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்தியாவின் செயலாற்றலைக் கண்டு வியந்து நிற்கிறோம். இந்தியப் படைகளின் திறமைகள் எங்களை ஈர்த்துள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு விரிவடைந்து வருவதால் இந்தியா தற்போது அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட சி-17, சி-130 ரக விமானங்களை பயன்படுத்தி வருகிறது.
இந்திய - அமெரிக்க உறவு மேலும் வலுவடையும்போது இன்னும் நிறைய சாதனைகளை செய்ய முடியும்" என்றார்.
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் முதன் முதலில் உதவிக்கரம் நீட்டியது இந்தியாவே என்பது குறிப்பிடத்தக்கது.