ஆப்கானிஸ்தான் இந்திய துணைத் தூதரக அலுவலகம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஐ.நா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், பயங்கரவாத நடவடிக்கைகள் எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவற்றை குற்ற நடவடிக்கையாகவே கருத முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் இந்திய துணைத் தூதரகம் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்திய தூதரகத்தை தாக்கிய தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தாக்குதலைத் தொடர்ந்து இந்திய தூதரகத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
தூதரகத்தின் மீதும், அதில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் மீதும் நடத்தப்படும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் பன்னாட்டு விதிகளின் படி ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்ற ஐ.நா. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.