விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) அமைப்பின் பெண் தலைவர் ஒருவர் இலங்கை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதான புருகேசு பாகீரதி என்ற இவர், கடற்புலிகள் பிரிவின் மகளிர் படை தலைவராக இருந்தவர். இவர் கடந்த திங்கள்கிழமை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் பாரீஸ் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய முயன்றபோது, பயங்கரவாத செயல்கள் புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “பிரான்ஸ் செல்ல முயன்றபோது பாகீரதி கைது செய்யப்பட்டார். இவரது கணவர் சுப்பிரமணியம் ஜெயகணேசனும் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தலைவராக இருந்து வந்தார். விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சர்வேதச அளவிலான நிதி விவகாரங்களை கவனித்து வந்தவர்களில் ஜெயகணேசனும் ஒருவர்” என்றனர்.
பாகீரதி 1997 முதல் 2000 ஆண்டு வரை கடற்புலிகள் மகளிர் படைத் தலைவராக இருந்துள்ளார். 2005-ல் இவர் பிரான்ஸ் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அவர் இலங்கை வந்துள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அவரை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.