ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபிய கூட்டணி நாடுகள் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தின. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஏமனில் 1990 முதல் 2012 பிப்ரவரி வரை அலி அப்துல்லா சேலா என்பவர் அதிபராக இருந்தார். ஷியா பிரிவைச் சேர்ந்த அவருக்கு எதிராக 2011-ல் புரட்சி வெடித்தது.
இதைத் தொடர்ந்து சன்னி பிரிவைச் சேர்ந்த மன்சூர் ஹதி, ஏமனின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றார். அவருக்கு எதிராக ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படையினர் உள்நாட்டுப் போரை தொடங்கினர்.
சில மாதங்களுக்கு முன்னர் தலைநகர் சனாவை, ஹவுத்தி கிளர்ச்சிப் படை கைப்பற்றியது. அதிபர் மன்சூர் ஹதி துறைமுக நகரான ஏடனுக்கு தப்பிச் சென்று அந்த நகரை ஏமனின் தலைநகராக அறிவித்தார்.
கடந்த வாரம் ஏடன் மீதும் ஹவுத்தி கிளர்ச்சிப் படை தாக்குதலை தொடங்கியது. கிளர்ச்சிப் படை முன்னேறி வரும் நிலையில் அதிபர் மன்சூர் ஹதி அந்த நகரில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
சவுதி திடீர் தாக்குதல்
ஏமனுக்கு அருகில் சன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் நிறைந்த சவுதி அரேபியா, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் அமைந்துள் ளன. அந்த நாடுகளின் தலைவர் கள் சன்னி பிரிவைச் சேர்ந்த ஏமன் அதிபர் மன்சூர் ஹதியை ஆதரித்து வருகின்றனர்.
அதேநேரம் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
இந்தப் பின்னணியில் அதிபர் மன்சூர் ஹதியின் வேண்டுகோளை ஏற்று ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு எதிராக சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் ஏமனுக்கு எதிராக நேற்று திடீர் தாக்குதலைத் தொடங்கின.
சவுதி அரேபிய விமானப் படையின் 100 போர் விமானங்கள் தலைநகர் சனாவை குறிவைத்து குண்டுகளை வீசின. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட் டோர் படுகாயம் அடைந்தனர். விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் குண்டுவீச்சில் கடும் சேதம் அடைந்துள்ளன.இந்தப் போரில் அமெரிக்கா நேரடி யாக ஈடுபடவில்லை. ஆனால் சவுதி அரேபியாவுக்கு பின்னணி யில் இருந்து உதவுவதாகக் கூறப்படுகிறது.
சவுதி அரேபியாவின் தாக்குத லுக்கு ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.