உலகம்

ஆஸ்திரேலியாவில் இந்திய பெண் கொலை- சிறப்பு புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை: இந்திய அரசு உறுதுணையாக இருக்கும் என சுஷ்மா உறுதி

பிடிஐ

ஆஸ்திரேலியாவில் இந்தியப் பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது தொடர் பாக ஆஸ்திரேலிய போலீஸார், சிறப்பு புலனாய்வுப் பிரிவை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பெண் கடைசியாக தனது கணவரிடம் செல்போனில் பேசியுள்ளார்.

அப்போது அவர் `என்னை கத்தியால் குத்திவிட்டான்” என்று கதறியுள்ளார். ஆனால் அதற்குள் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

பெங்களூரைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் அங்கு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரபா ஷெட்டி. இத்தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார்.

சாப்ட்வேர் இன்ஜினீயரான பிரபா கடந்த 2002-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பணியாற்றி வந்தார். ஒவ்வொரு நாள் இரவும் பணி முடிந்து கணவருடன் அவர் செல்போனில் பேசுவது வழக்கம்.

கடந்த 7-ம் தேதி இரவு பிரபா பணி முடிந்து சிட்னி புறநகர்ப் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு ரயிலில் புறப்பட்டார்.

பாராமட்டா ரயில் நிலையத்தில் இறங்கி அவரது வீடு அமைந் துள்ள வெஸ்ட்மேட் பகுதிக்கு இரவு 9.30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

தனது கணவர் அருண் குமாருடன் செல்போனில் பேசிய படி சென்றுள்ளார். அப்போது கணவரிடம், யாரோ ஒருவர் என்னை பின்தொடர்கிறார் என்று பிரபா கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் பிரபாவின் அழுகை குரல் கேட்டுள்ளது. `எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள், பர்ஸ், பணம் எல்லாவற்றையும் தருகிறேன். என்னை ஒன்றும் செய்யாதே” என்று கூறியுள்ளார்.

மறுமுனையில் பதறிய அருண்குமார், `என்ன நடக்கிறது, உனக்கு என்னவாயிற்று’ என்று கேட்டுள்ளார். அதற்கு பிரபா, `என்னை குத்திவிட்டான்’ என்று கூறியுள்ளார். அதற்குள் செல் போன் இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது.

உடனடியாக, பிரபாவின் அறைதோழி சாரதாவை செல் போனில் தொடர்பு கொள்ள அருண்குமார் முயன்றுள்ளார். ஆனால் உடனடியாக தொடர்பு கிடைக்கவில்லை. பிரபாவின் சகோதரர் ஒருவர் ஆஸ்திரேலி யாவின் பெர்த் நகரில் டாக்டராக பணியாற்றி வருகிறார். அவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். அவர் தனது சிட்னி நகர நண்பர்கள் மூலம் தங்கையின் நிலையை அறிய முயன்றுள்ளார்.

அரை மணி நேரத்துக்குப் பிறகு பிரபாவுடன் பணியாற்றும் ஊழியர்கள் அருண்குமாரை தொடர்பு கொண்டுள்ளனர். கத்திக் குத்து காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பிரபா உயிரிழந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிசிடிவி கேமரா பதிவு வெளியீடு

இந்த கொடூர கொலை தொடர் பாக ஆஸ்திரேலிய போலீஸார் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக பாராமட்டா பகுதியில் பிரபா நடந்து செல்லும் சிசிடிவி கேமரா பதிவை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதில் பிரபா மட்டுமே நடந்து செல்கிறார். சந்தேகப்படும்படியான நபர் யாரும் தென்படவில்லை.

மேலும் சம்பவ இடத்தில் பிரபாவின் கைப்பை திருடப்படவில்லை. இதனால் திருட்டுக்காக இந்த கொலை நடந்ததா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனவே பாலியல் பலாத்கார முயற்சியில் பிரபா கொல்லப்பட்டாரா அல்லது இனவெறி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபாவின் கணவர் அருண்குமார் பெங்களூரில் இருந்து நேற்று சிட்னி சென்றடைந்தார். பிரபாவின் கடைசி செல்போன் உரையாடல் குறித்து அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அமைச்சர் சுஷ்மா ஆறுதல்

இந்தச் சம்பவம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியபோது, பிரபா கொலை சம்பவம் தொடர்பாக சிட்னியில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் உள்ளேன். அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இந்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

பிரபாவின் உடலை ஆஸ்திரேலி யாவில் இருந்து பெங்களூர் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT