பின் லேடன் இருப்பிடம் குறித்து சி.ஐ.ஏ-வுக்கு தகவல் அளித்து உதவிய ஷாகில் அஃப்ரிதியின் வழக்கறிஞர் சமயுல்லா அஃப்ரிதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானின் பெஷாவார் நகரில் சென்று கொண்டிருந்த சமயுல்லா அஃப்ரிதியின் கார் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்ததாக டான் செய்தி சேனலில் ஆன்லைன் பதிப்பு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு தலிபான் இயக்கத்தின் இருவேறு கிளைகள் பொறுப்பேற்றுள்ளன.
கடந்த 2013-ல், தொடர்ந்து வந்த அச்சுறுத்தலால் பாகிஸ்தானிலிருந்து தப்பித்து சென்ற சமயுல்லா அஃப்ரிதி சமீபத்தில் நாடு திரும்பினார். இருப்பினும், பின் லேடனை பிடிக்க சி.ஐ.ஏ-வுக்கு துப்பு அளித்த மருத்துவர் ஷாகில் அஃப்ரிதியின் மீதான வழக்கில் தான் ஆஜராகப்போவதில்லை என்று தெரிவித்தார்.
கைபர் மாகாண லஷ்கர்-இ-இஸ்லாம் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக மருத்துவர் ஷாகில் அஃப்ரிதி மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் ஷாகில் தரப்பு வழக்கறிஞராக சமயுல்லா ஆஜாராகி இருந்தார்.