உலகம்

கோத்தபய ராஜபக்ச மாலத்தீவில் தஞ்சம்

செய்திப்பிரிவு

இலங்கையில் அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதும், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபய ராஜபக்ச, அவரது மனைவி அயோமா ஆகிய இருவரும் மாலத்தீவில் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் சென்றதால் விசா தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், விசா இல்லாமல் ராணுவ விமானத்தை அனுமதிக்க சிங்கப்பூர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ராஜபக்ச மகன்கள் சீனாவுக்கு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது: தேர்தல் முடிவு தனக்கு சாதகமாக வராத காரணத்தால், அவசரநிலையை பிரகடனம் செய்யவும் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யவும் மகிந்த ராஜபக்ச முயற்சி செய்தார். இதுதொடர்பாக அவர் விடுத்த கோரிக்கையை அட்டர்னி ஜெனரல் ஏற்க மறுத்துவிட்டார்.

எனினும், ரணில் விக்கிரமசிங்கேவை நேரில் சந்தித்த அட்டர்னி ஜெனரல், பாதுகாப்பான இடத்துக்கு ராஜபக்சவை அனுப்பி வைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது தனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகே ராஜபக்ச அதிபர் பதவியிலிருந்து விலக முன்வந்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தை கலைக்கவும் ராஜபக்ச திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT