தெற்கு சூடானில் செயல்படவுள்ள ஐ.நா. அமைதிப்படையில் 700 பேர் கொண்ட தனது ராணுப் படைப்பிரிவில் முதன்முதலாக ராணுவ வீராங்கனைகளையும் சீனா சேர்த்துள்ளது. அந்தப்படையில் 13 வீராங்கனைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐ.நா. திட்டத்தில் சீனப் பெண்கள் ஆயுதம் தாங்கி பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.
இப்படையில் 121 அதிகாரிகளும், 579 வீரர்களும் உள்ளனர். இப்படைப்பிரிவு, பொதுமக்கள், ஐ.நா.அதிகாரிகள், மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டுள்ளவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பளிக்கும். ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உள்ள நிரந்தர உறுப்புநாடுகளில் சீனாதான் அமைதிப்படையில் அதிக ராணுவ வீரர்களை ஈடுபடுத்தியுள்ளது.
27,000 சீன வீரர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் ஐ.நா. அமைதிப்பணியில் ஈடுபட்டுள்ளதாக, சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஐ.நா. சார்பில் சீனா தனது படைகளை அனுப்பவில்லை. மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக சீனா குற்றம் சாட்டி வருகிறது.