இராக்கில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி காயமடைந்தார். இத்தகவலை இராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இராக்கின் மேற்கில் உள்ள அம்பர் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை ஐஎஸ் தீவிரவாதிகள் ரகசிய கூட்டம் நடத்தினர். இதில் அபுபக்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர். அப்பகுதியை குறிவைத்து இராக் ராணுவத்தினர் வான் வழியாக தாக்குதல் நடத்தினர். இதில் அபுபக்கர் உட்பட ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் பலர் காயமடைந்தனர் என்று இராக் அரசு உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.
உலகின் மிகக் கொடூரமான தீவிரவாத இயக்கமாக ஐஎஸ் அமைப்பை உருவாக்கியதில் அபு பக்கர் முக்கிய பங்கு வகித்தவர். 2010-ம் ஆண்டில் ஐஎஸ் அமைப்பில் தலைவரானது முதல் எப்போதும் தலைமறைவாக இருந்து வரும் அபுபக்கர், இதுவரை ஒருமுறை மட்டுமே பொது இடத்தில் தோன்றியுள்ளார்.
இராக்கின் மொசூல் நகரில் உள்ள மசூதியில் அவர் பேசிய வீடியோ கடந்த ஜூன் மாதம் இணையதளத்தில் வெளியானது. அப்போதுதான் அவர் அடையாளம் காணப்பட்டார். அபு பக்கர் தொடர்பாக அமெரிக்கா ராணுவ தலைமையக மான பென்டகன் விடுத்துள்ள செய்தி யில், எப்போது நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அபுபக்கர் காயமடைந்தார் என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.