உலகம் முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் எய்ட்ஸுக்கு 10 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.
ஐ.நா. சபை சார்பில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், எய்ட்ஸ் அறிவியல் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. இதில் வெளியிடப்பட்ட ஆய்வறிக் கையில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களில் 53 சதவீதம் பேருக்கு மட்டுமே மருத்துவ வசதி கிடைக்கிறது. விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் எய்ட்ஸ் நோயாளிகளின் உயிரிழப்பு கணிசமாக குறைந் துள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டில் எய்ட்ஸ் காரணமாக 19 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்த எண் ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் 10 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.
வரும் 2020-ம் ஆண்டுக்குள் 3 கோடி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்க ஐ.நா. சபை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த 1980-க்குப் பிறகு உலகம் முழுவதும் 7.61 கோடி பேர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3.5 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் புதிதாக 18 லட்சம் பேருக்கு எச்ஐவி வைரஸ் தொற்றியுள்ளது.
எய்ட்ஸ் நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் கிழக்கு, தெற்கு ஆப்பிரிக்காவில் வசிக்கின்றனர். அந்தப் பகுதிகளில் ஐ.நா. சபை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் காரணமாக எச்ஐவி வைரஸ் பரவுவது குறைந் துள்ளது. எனினும் மத்திய கிழக்கு, வடஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா பகுதிகளில் எச்ஐவி வேகமாகப் பரவி வருவது கவலையளிக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.