ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டுவிட்டார் என்று மூத்த தலைவர் அயத்துல்லா கொமேனி உறுதியாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அயத்துல்லா கொமேனி கூறியதாக ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், "ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி நிச்சயமாக இறந்துவிட்டார்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இராக்கின் அரசு பாதுகாப்புப் படை அதிகாரிகள் பலரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
சிரியாவின் ராக்கா அருகே கடந்த மாதம் 28-ம் தேதி ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அப்போது சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் அவர்கள் குழுமியிருந்த பகுதியில் சுமார் 10 நிமிடம் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் 30 முக்கிய தளபதிகளும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஐஎஸ் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் அபு பக்கர் அல் பாக்தாதியும் உயிரிழந்திருப்பதாக ரஷ்யா கூறியுது.
ஆனால் அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டுள்ளதற்காக உறுதியான தகவல் ஏதும் இல்லை என்று அமெரிக்கா கூறி வந்த நிலையில் ஈரான் இவ்வாறு தெரிவித்துள்ளது.