உலகம்

பள்ளி வேன் விபத்தில் 18 பேர் பலி

ஏஎஃப்பி

எகிப்தில் பள்ளி வேன் ஒன்று டேங்கர் லாரியுடன் மோதியதில் அதில் பயணித்தவர்களில் 18 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர்.

கெய்ரோ நகரத்தில் இருந்து 160 கிலோமீட்டர் வடக்கே உள்ள தமன்ஹூர் எனும் இடத்தில் நேற்று பள்ளி வாகனம் ஒன்று டேங்கர் லாரியுடன் மோதியது. அப்போது வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால், பலர் உடல் கருகி உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களில் எத்தனை பேர் பள்ளிக் குழந்தைகள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

மொத்தம் 18 பேர் உயிரிழந்ததாகத் தகவல் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர்.சமீபத்தில் பெய்த கனமழையால் பள்ளி வாகனம் சறுக்கி நிலைதடுமாறி அதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று மாகாண ஆளுநர் முஸ்தபா ஹதூத் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இதேபோன்றதொரு சம்பவத்தில் 11 மாணவிகள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.எகிப்தில் சாலை விதிகள் அவ்வளவு கடுமையாகப் பின்பற்றப்படுவதில்லை. இதனால் எகிப்தில் ஓர் ஆண்டில் சுமார் 12,000 இறப்புகள் சாலை விபத்துகளால் ஏற்படுகின்றன.

          
SCROLL FOR NEXT