உலகம்

3 ஆண்டுக்கு முன்பு 300 பேருடன் மூழ்கிய தென்கொரிய கப்பல் மீட்பு

செய்திப்பிரிவு

தென்கொரியாவில் 3 ஆண்டு களுக்கு முன்பு 300 ேபருடன் கடலில் மூழ்கிய சொகுசு கப்பல் நேற்று கடலின் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டது.

கடந்த 2014 ஏப்ரல் 16-ம் தேதி தென்கொரியாவின் தென்மேற்கு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது. இதில் 300 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவ, மாணவியர் ஆவர்.

சுமார் 40 மீட்டர் ஆழத்தில் கப்பல் மூழ்கியது. 145 மீட்டர் நீளம், 6,825 டன் எடை கொண்ட அந்த கப்பலை மீட்டு அப்புறப்படுத்த அந்த நாட்டு அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டது. இந்தப் பணி சீனாவைச் சேர்ந்த ஷாங்காய் சால்வேஜ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த நிறுவனம் கடலுக்குள் 33 தூண்களை நிறுவி 2 மீட்பு கப்பல்கள் மூலம் தென்கொரிய கப்பலை நேற்று கடலின் மேற்பரப்புக்கு கொண்டு வந்தது. இன்னும் 2 வாரங்களில் தென்கொரிய கப்பல் அங்கிருந்து அகற்றப்பட உள்ளது.

மொத்தம் 450 ஊழியர்கள் சொகுசு கப்பலை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிக்கு ரூ.471.5 கோடி செலவிடப்படுகிறது.

கப்பல் முழுமையாக மீட்கப்பட்ட பிறகு விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT