உலகம்

சவுதி அரேபியா - மாறுகிறார் மன்னர்

செய்திப்பிரிவு

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் தனது 31 வயது மகன் முகமது பின் சல்மானை அடுத்த மன்னராக (பட்டத்து இளவரசர்) நியமனம் செய்திருக்கிறார். இவர் தற்போதைய மன்னரின் மூன்றாவது மனைவிக்கு பிறந்தவர்.

அரச வம்சத்துக்குள்தான் அடுத்த வாரிசு என்பது அங்கு எழுதப்படாத சட்டம். ஆனால் தாத்தா-தந்தை-மகன் என்பதுபோல் அடுத்தடுத்து அரசாள வேண்டும் என்பதில்லை. மன்னரின் வாரிசாக இதுவரை அறியப்பட்டவர் இளவரசர் முகமது பின் நயீப். மன்னரின் சகோதரர் மகனான இவர், உள்துறை வெளியுறவுத்துறை அமைச்சராக கோலோச்சிக் கொண்டிருந்தார். இவர் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்.

அடுத்த அரசராக நியமிக்கப் பட்டிருக்கும் முகமது பின் சல்மான் ஏற்கெனவே பாதுகாப்பு அமைச்சராக விளங்குகிறார். சவுதி யின் பொருளாதாரத்தை மேம்படுத் தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். வெளிநாடுகளைப் பொருத்தவரை பட்டத்து இளவரசரான சல்மான் அதிகம் அறியப்படாதவர்.

மகனை நன்கு உருவாக்கிய பிறகு அவர் மீது நம்பிக்கை கொண்டு அவரையே அடுத்த மன்னராக நியமித்துவிட்டார் என்று சிலர் கூற, சகோதரரின் மகனை விட மகன்தானே அவருக்கு நெருக்கமாக இருக்க முடியும் என்கின்றனர் வேறு சிலர்.

கத்தார் மற்றும் ஈரானுடன் சவுதி அரேபியா கடுமையான எதிர்ப்பைக் காட்டிவரும் இந்த காலகட்டத்தில் மன்னர் இந்த முடிவை எடுத்திருப்பது பலருக்கும் வியப்பை அளித்திருக்கிறது.

முகமது பின் நயீப் தீவிர வாதத்தைப் பெரிதும் அடக்கியவர். அல் காய்தாவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர். அவரது வருங்கால மன்னர் பதவி மட்டுமல்ல தற்போதைய பிற பதவிகளும்கூட பறிக்கப்பட்டுள்ளன.

2014-ல் கச்சா எண்ணெய் விலை சரிவைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டது. இதையடுத்து முகமது பின் சல்மான் அரசு ஊழி யர்களின் விடுமுறைப் படிகளை ரத்து செய்தார். மருத்துவப் படிகள், வீட்டு வாடகைப் படிகளைக் கணி சமாகக் குறைத்தார். ஊதியமும் 3-ல் ஒரு பங்கு குறைக்கப்பட்டது.

அரசு ஊழியர்களிடையே இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சிக்கனம் என்பது அரச குடும்பத் திலிருந்து தொடங்க வேண்டும் என்ற முணுமுணுப்பு எழுந்தது. அதிலும் 2015-ல் ஒரு புதிய பாய்மரக் கப்பலைத் தனக்கென்று அரை பில்லியன் டாலர் கொடுத்து இளவரசர் வாங்கிக் கொண்டது விமர்சனத்துக்குள்ளானது.

இதைத் தொடர்ந்து தனது பொருளாதார சீர்திருத்தங்களை மாற்றியமைத்து விட்டார் இளவர சர். முழுவதுமாக ஒரு யூ-டர்ன் செய்துவிட்டார்.

அரச வம்சத்தின் பிற கிளையினரைச் சமாதானப்படுத்தும் விதத்தில் மன்னரின் தற்போதைய முடிவில் ஒரு நிபந்தனை சேர்க்கப் பட்டிருக்கிறது. வருங்காலத்தில் முகமது பின் சல்மான் தனது மகன்களில் எவரையும் தனது வாரி சாக நியமிக்கக் கூடாது என்பதுதான் அது.

SCROLL FOR NEXT