உலகம்

சிரியாவில் கார் குண்டு வெடித்து 20 பேர் பலி

செய்திப்பிரிவு

சிரியாவில் இட்லிப் நகரில் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

இட்லிப் நகரின் வணிக வளாகப் பகுதியில் கார் குண்டு பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இதில் காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸில் வெடிகுண்டுகளை நிரப்பிய 2 கார்களை தற்கொலைப் படை தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வெடிக்கச் செய்தனர்.

அரசு தொலைக்காட்சி நிறுவனம் அமைந்துள்ள உன்மயாத் சதுக்கம் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்தடுத்து வந்த 2 கார்கள் கட்டடத்தின் வாயிலில் மோதி வெடித்துச் சிதறின. இதில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.

கார் குண்டுகள் வெடித்த இடத்துக்கு மிக அருகில் உள்ள ஹோட்டலில், ஐ.நா. சபை ரசாயன ஆயுத நிபுணர்கள் தங்கியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT