காத்மாண்டு: நேபாளத்தில் பெருவெள்ளத்தில் ஏற்பட்ட பேரழிவின் போது, நீர்மின் நிலைய சுரங்கத்தில் சிக்கிய 2 தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த ஆக.26-ம் தேதி, ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நதிகளையொட்டி அமைந்திருந்த பல நீர்மின் நிலைய திட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. ரசுவா மாவட்டத்தில் போடே கோசி ஆற்றில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்துக்குப் பிறகு, திரிசூலி-3ஏ நீர்மின் நிலைய திட்டத்தின் சுரங்கப் பாதைக்குள் 900 பேர் சிக்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
9 நாட்களுக்குப் பிறகு, அவர்களை உயிருடன் மீட்பதற்கான நம்பிக்கை மெல்ல குறைந்து கொண்டிருந்த நேரத்தில், நேற்று ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. சுரங்கப் பாதைக்குள் சேற்றில் சிக்கிக் கொண்டிருந்த 2 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் கபீர் மஹர்ஜன் (45), சஞ்சய் ஷா (30) என்பது தெரிய வந்துள்ளது. மீட்கப்பட்ட சஞ்சய் ஷா சிகிச்சைக்காக நேபாள ராணுவ முகாமில் சேர்க்கப்பட்டார். இருவரும் சுரங்கப் பாதைக்குள் சுமார் 170 மீட்டர் தொலைவில் இருந்து மீட்கப்பட்டனர்.
தரையில் இருந்த ஒரு பள்ளத்தில் இருந்து கபீர் மஹர்ஜன் வெளியே இழுக்கப்பட்டு பின்னர் ஸ்ட்ரெச்சர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சஞ்சய் ஷா முகம் முழுவதும் சேறு படிந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருவரும் உயிருடன் மீட்கப்படுவது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அங்கிருந்தவர்கள் உற்சாக குரலெழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சஞ்சய் ஷாவின் உடல் செயல்பாடுகள் இயல்பாக உள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சுரங்கப் பாதையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டபோது, தனது கணவர் சுயநினைவுடன் இருந்ததாகவும், மகர்ஜனின் மனைவி தெரிவித்தார். மீட்புப் பணியாளர்கள், சுரங்கப் பாதைக்குள் சிக்கியுள்ள மற்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.