அடர்ந்த காட்டுக்குள் வழி தவறிவிட்டால், வழியைக் கண்டுபிடிக்க சிம்பன்ஸியிடம் உதவி கோரலாம். சிம்பன்ஸிகள் எளிதில் வழியைக் கண்டுபிடிப்பதுடன், உணவு இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்துக் கொடுக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சிம்பன்ஸிகளின் தகவல் தொடர்பு பரிமாற்றம் குறித்து அமெரிக்க மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் ஒரு பகுதியாக, சிம்பன் ஸிகள் வழிதவறிய மனிதர்களுக்கு வழியைக் காட்டிக் கொடுக்குமா என ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது, சிம்பன்ஸிகள் சைகை மூலம் வழியைக் காட்டிக் கொடுக்கின்றன என்பது தெரிய வந்தது. இதனை பரிசோதித்துப் பார்க்க, பரந்த வனப்பரப்பில் ஓரிடத்தில் உணவு மறைத்து வைக்கப்பட்டது. காட்டுக்குள் விடப்பட்ட மனிதர் தானாக முயன்று அந்த இடத்தைக் கண்டு பிடிக்க முயன்றும் முடியவில்லை. ஆனால், சிம்பன்ஸிகள் இருந்த இடத்தில் இருந்த மனிதர், அவற்றின் உதவியை சைகை மூலம் கோரவே, அவை உணவு இருந்த இடத்தை எளிதில் கண்டுபிடித்துக் கொடுத்தன.
இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான செஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் அண்ணா ராபர்ட்ஸ் கூறுகையில், “இந்த ஆய்வு முடிவு மொழிகள் எப்படி உருப்பெற்றன என்பதற்கான ஆய்வில் மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்றார்.
ஸ்டெர்லிங் பல்கலைக்கழக பேராசிரியர் சாரா ஜான் விக் கூறுகையில், இதற்கு முந்தைய ஆய்வுகள் சிம்பன்சிகளின் சைகை மொழியில் நெகிழ்வுத் தன்மை இருப்பதைச் சுட்டிக்காட்டின. தற்போது, மிகவும் சிக்கலான சூழலில் அவற்றின் அறிவுத் திறனை வெளிப்படுத்த முடியும் எனத் தெரியவந்துள்ளது” என்றார் அவர்.