உலகம்

இலங்கை வெள்ளம்: பலி எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு

பிடிஐ

இலங்கையில் பெய்ந்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 164-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இலங்கையின் தேசிய பேரிடர் மேலாண்மை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இலங்கையில் கடந்த 14 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெய்ந்து வரும் கனமழைக்கு 164 பேர் பலியாகியுள்ளனர். 104 பேர் காணாமல் போய் உள்ளனர். 230 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சம் பேர் தங்கள் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.

தென் இலங்கையின் மாத்தறை, காலே, களுத்துறை, கேகாலை, ரத்தினபுரி, அம்பாந்தோட்டை, கம்பகா, கொழும்பு ஆகிய 8 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

நிவாரண பொருட்கள் எடுத்துச் சென்ற விமானம் விபத்து

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டுச் சென்ற MI-17 விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானப் படை வீரர் ஒருவர் பலியானார்.

இந்தியா, சீனா நிவாரண உதவி

பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக ஐஎன்எஸ் கிர்ச் போர்க் கப்பலை உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களுடன் கொழும்புவுக்கு இந்தியா அனுப்பியுள்ளது.

நிவாரணப் பணிக்காக 2.2 மில்லியன் டாலரை சீனா வழங்கியுள்ளது.

இதற்கிடையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இலங்கை வானிலை மையம் அறிவித்திருப்பதால் நிவாரண பணிகளை இலங்கை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT