அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன் ரஷ்யாவில் இன்னும் சில வருடங்கள் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இது குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா சாகரோவா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "எட்வர்டு ஸ்னோடன் இன்னும் சில வருடங்கள் ரஷ்யாவில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் உளவு ரகசியங்கள் பலவற்றை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்னோடன்.
பிற நாடுகளின் அரசு செயல்பாடுகளையும், சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வருவதை அவர் உலகுக்கு பகிரங்கப்படுத்தினார்.
இதன் காரணமாக அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எட்வர்டு ஸ்னோடன், அதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.