2013-ம் ஆண்டு தனது வீட்டில் தனது தோழி ரீவா ஸ்டீன்கேம்ப் என்பவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது மேல்முறையீடு தென் ஆப்பிரிக்க நீதிமன்றம்.
தண்டனை விதிக்கப்பட்டவுடன் தனது குடும்பத்தினரை கட்டித் தழுவிக் கொண்டார் பிஸ்டோரியஸ், பிறகு உடனடியாக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நீதிபதி தொகோஸைல் மசீபா, பிஸ்டோரியஸை மர பெஞ்சில் அமரச்செய்தார்.
அதாவது, இந்த நீதிமன்றம் தற்போது சரியான தண்டனையை அளிக்கத் தலைப்பட்டுள்ளது, என்று கூறிய நீதிபதி, தண்டனைக்கு பல்வேறு காரணிகளை தான் கவனத்தில் எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார்.
சமூக அக்கறைகள், பாதிக்கப்பட்ட ஸ்டீன்கேம்ப் குடும்பத்தினரின் மன உளைச்சல், பெருகி வரும் கொலைக்குற்றங்கள், மற்றும் கொலைக்குற்றவாளிகளுக்கான மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை தனது தீர்ப்பிற்கு முன்னால் பரிசீலிக்க வேண்டி உள்ளது என்றார் நீதிபதி.
நீதிபதி தீர்ப்பை படிக்கப் படிக்க அவரையே அமைதியாக உற்று நோக்கியபடி இருந்தார் பிஸ்டோரியஸ்.
2014-ம் ஆண்டு இதே நீதிபதி மசீபா இந்த வழக்கில் பிஸ்டோரியஸ் மீதான குற்றச்சாட்டுகள் அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்படவில்லை என்று அவரை விடுவித்தார். ஆனாலும் மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ததாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
சிறையில் ஓராண்டு கழித்த பிஸ்டோரியஸ் பரோலில் வெளியே வந்து தென் ஆப்பிரிக்க உச்ச நீதிமன்றத்தில் தனது தண்டனையைக் குறைக்கக் கோரி மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் பிஸ்டோரியஸ் கொலைக் குற்றவாளி என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
கீழ்கோர்ட்டில் இந்தத் தண்டனை மீதான வாதம் ஜூன் 13 முதல் ஜூன் 17 வரை நடைபெற்றது. இந்த வாதங்களில் பிஸ்டோரியஸுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க அரசு தரப்பு வலியுறுத்தியது.
இந்நிலையில், இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி, பல்வேறு காரணிகளை கவனத்தில் கொள்வதாகக் கூறி 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
2013-ம் ஆண்டு காதலர் தினத்தன்று மாடல் அழகியும் இவரது தோழியுமான ரீவா ஸ்டீன்கேம்பை பிஸ்டோரியஸ் சுட்டுக் கொன்றார். படுக்கையறை கழிவறைக் கதவை நோக்கி அவர் 4 முறை சுட்டார். இதில் ரீவா ஸ்டீன்கேம்ப் பரிதாபமாக உயிரிழக்க, பிஸ்டோரியஸ் வேற்று மனிதர் ஊடுருவல் என்று நினைத்து சுட்டதாக க் கூறினார். ஆனால் சாட்சியங்களின் தரப்பின் படி கடும் வாக்குவாதங்களுக்குப் பிறகு பிஸ்டோரியஸ், ஸ்டீன்கேம்பை சுட்டுக் கொன்றார் என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற பிஸ்டோரியஸ் உடனடியாக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.