சிரியா கடந்த 5 ஆண்டுகளில் 13,000 சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது என்ற அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு அறிக்கையை சிரியா அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.
மேலும் அம்னஸ்டியின் அறிக்கையை முற்றிலுமான பொய் என்றும், இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் சர்வதேச அரங்கில் சிரியாவுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் சிரிய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பு தெரிவித்தது.
இது தொடர்பாக அம்னஸ்டி வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
சிரியாவில் கடந்த ஐந்து வருடங்களாக நடந்த உள்நாட்டுப் போரில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிரானவர்கள் என 13,000 பேருக்கு ரகசியமாக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சித்ரவதை செய்யப்பட்டு, உணவு அளிக்கப்படாமல் கொல்லப்பட்டுள்ளனர். இன்றளவும் அங்கு வாரந்தோறும் 50 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியாவைச் சேர்ந்த அரசுப் படை வீரர்கள், நீதித்துறை வட்டாரங்களில் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்த ஆய்வறிக்கையை வெளி யிட்டுள்ளதாக அம்னஸ்டி தரப்பில் கூறப்பட்டிருந்தது.