உலகம்

உலகின் மகிழ்ச்சியான நாடு நார்வே: புதிய ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற அந்தஸ்தை நார்வே பெற்றுள்ளது.

ஐ.நா.சபை கடந்த 2012-ல் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் தொலைதொடர்பு (எஸ்டிஎஸ்என்) என்ற அமைப்பை நிறுவியது.

இந்த அமைப்பு சார்பில் 2017-ம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடு எது? என்ற ஆய்வு நடத்தப்பட்டது. அதில் நார்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிரியா, ஏமன் மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகள் சொற்ப அளவிலேயே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்தப் பட்டியலில் 155 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து எஸ்டிஎஸ்என் இயக்குநர் ஜெப்ரே சேக்ஸ் கூறும்போது, ‘‘அரசு மீது முழு நம்பிக்கை, பாரபட்சமற்ற சமூகம், சமுதாயத்தின் மீது அதிகபட்ச நம்பிக்கை, சமூக மூலதனம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை, சுதந்திரம், சமூக ஆதரவு, அரசியலில் மற்றும் தொழில் துறைகளில் ஊழல் இல்லாத நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது’’ என்றார்.

இந்த பட்டியலில் டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, பின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

தெற்கு சூடான், லைபீரியா, டோகோ, டான்சானியா, புரூண்டி மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் கடை நிலையில் இடம்பிடித்துள்ளன.

ஜெர்மனி 16-வது இடத்திலும் பிரிட்டன் (19), பிரான்ஸ் (31) நாடுகள் அதற்கு அடுத்த நிலையிலும் உள்ளன. அமெரிக்காவும் ஓரிடம் பின்தங்கி 14-வது இடத்தை பிடித்துள்ளது. சமமின்மை, நம்பிக்கையின்மை, ஊழல், அதிபர் ட்ரம்பின் தவறான பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவை தான் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளியுள்ளது என சேக்ஸ் தெரிவித்தார்.

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, பின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

SCROLL FOR NEXT