அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் மிக அவசியானது, அதற்கான பணத்தை மெக்சிகோ ஏதாவது வழியில் அளித்தே தீரும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற 100-வது நாளில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் அமைக்கப்படவுள்ள தடுப்புச் சுவருக்கான நிதி குறித்து முக்கியத்துவம் அளித்து ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் தடுப்பு அமைவது என்பது மிக அவசியமானது. எல்லை சுவர் அமைவதற்கான நிதியை மெக்சிகோ அளிக்க மறுத்தாலும். ஏதேனும் ஒருவகையில் மெக்சிகோ அந்த நிதியை அளித்தே தீரும்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக மெக்சிகோவில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகின்றனர். இதைத் தடுக்க சுமார் 670 மைல் தொலைவுக்கு பல்வேறு வகைகளில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இரு நாட்டு எல்லையில் பிரம்மாண்ட சுவர் எழுப்பப்படும் என்று அறிவித்தார். இதற்கான ஒப்பந்தங்களில் ஜனவரி மாதம் ட்ரம்ப் கையெழுதிட்டார்.
அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லை தடுப்புச் சுவர் விவகாரம் இரு நாடுகளின் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.