உலகம்

‘பனாமா பேப்பர்ஸ்’ அம்பலப்படுத்திய ஊழல்: நவாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க கூட்டு விசாரணைக் குழு - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் (67) மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க கூட்டு விசாரணைக்குழுவை அமைக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

பனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சட்ட விரோத மாக முதலீடு செய்துள்ளனர். இது தொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பெயரும் இருந்தது. இவர் 1990-களில் பிரதமராக இருந்தபோது லண்டனில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியதாகவும், சில நிறுவனங்களை அவரது மகன்கள் நிர்வகித்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து, நவாஸ் ஷெரீபை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி 23-ம் தேதி முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

பதவி தப்பியது

இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. மொத்தம் 547 பக்கங்களைக் கொண்ட அந்தத் தீர்ப்பில், “பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீபை அகற்றுவதற்கு போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. எனினும் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது.

மத்திய புலனாய்வு அமைப்பு (எப்ஐஏ), உளவு அமைப்பு (ஐஎஸ்ஐ), ராணுவ உளவு அமைப்பு உள்ளிட்ட 5 அமைப்புகளின் உயர் அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெறுவர். இக்குழு முன்பு நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் ஹசன் மற்றும் ஹுசைன் ஆகியோர் ஆஜராக வேண்டும். இக்குழு 2 மாதத்தில் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, நவாஸ் ஷெரீபின் பதவி பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதி, உச்ச நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT