ஈரானில் எண்ணெய் வளம் அதிகமாக உள்ள, குசேஸ்தான் மாகாணத்தில் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் 20 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஈரான் அரசு ஊடகம் தரப்பில், "ஈரானில் எண்ணெய் வளம் அதிகம் உள்ள மாகாணங்களில் குசேஸ்தான் மாகாணமும் ஒன்று. இங்கு அரபு பிரிவினைவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில் சனிக்கிழமையன்று அஹ்வாஸ் நகரத்தில் உள்ள ராணுவ அலுவலகத்தில் ராணுவ அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்திறங்கிய இரண்டு நபர்கள் துப்பாக்கியைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 20 பேர் காயமடைந்தனர். இதில் குழந்தைகளும், பெண்களும் அடங்குவர்'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படங்களை ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்தத் தாக்குதலை ஐஎஸ் அமைப்புகள் நிகழ்த்தி இருக்கலாம் என்று ஈரான் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் ஈரான் நாடாளுமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சமீபத்தில் கூட ஈரானின் எண்னேய் நிறுவனம் ஒன்றில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.