ஈஸ்டர் தொடர் தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாமியர்களுக்கு எதிரான பதிவுகளால் இலங்கையில் ஆங்காங்கே கலவரங்கள் நடந்து வருவதால் சமூக ஊடகங்கள் அங்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீஸார் தரப்பில், ''ஃபேஸ்புக் பதிவால் இலங்கையில் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள சில்லாவ் நகரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கலவரங்கள் நடந்துள்ளன. பாதுகாப்புப் படைகள் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகின்றனர். எனினும் கலவரம் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து கலவரம் ஏற்படாமல் அமைதியை ஏற்படுத்த சமூக வலைதளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் கிறித்தவ தேவாலயம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 253 பேர் உயிரிழந்தனர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. அங்குள்ள என்.டி.ஜே அமைப்புக்கும் இதில் தொடர்புள்ளதாக இலங்கை அரசு அந்த அமைப்பையும் தடை செய்தது.
தொடர்ந்து இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.