உலகம்

ஸ்லோவாக்கியாவின் முதல் பெண் அதிபர்

செய்திப்பிரிவு

நாட்டையே உலுக்கிய பத்திகையாளர்  ஜான் குசியாக் மரணத்தைத் தொடர்ந்து ஸ்லோவாக்கியாவில் நடத்த பொதுத்தேர்தலில் சுசனா வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்லோவாக்கியாவின் பத்திரிகையாளரான ஜான் குசியாக், அந்நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு இடையே உள்ள் தொடர்பை வெளிக்கொண்டு வந்ததற்காக கடந்த பிப்ரவரி மாதம் தனது இல்லத்தில் காதலியுடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஜானின் மரணத்துக்கு நியாயம் வேண்டி மக்கள் பேரணிகள் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அதிபர் ராபர் பிகோ பதவி விலகினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த பொதுத்தேர்தலில் முற்போக்கு ஸ்லோவாக்கியா கட்சியின் அதிபர் வேட்பாளராக சுசனா போட்டியிட்டார். அவர் 58.3 % வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வழக்கறிஞரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான சுசனா அரசியல் பின்புலம் இல்லாதவர். கடந்த 2017 ஆம் ஆண்டு முற்போக்கு ஸ்லோவாக்கியா கட்சியில் இணைந்தார்.

ஸ்லோவாக்கியாவின் முதல் பெண் அதிபர், ஸ்லோவாக்கியாவின் மிகக் குறைந்த வயது அதிபர் என்ற பெருமையையும் சுசனா பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT